பூண்டி ஏரி
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், மற்றும் கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11.757 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இதில் பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாக உள்ளது. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரைசேமித்து வைத்து தேவைப்படும்போது புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடுவது வழக்கம்.
மேலும் கோடை காலத்தில் இந்த ஏரி வறண்டு விடும்போதெல்லாம் சென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. மறுபுறம் பலத்த மழைக்கு ஏரி முழுவதுமாக நிரம்பினால் உபரிநீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம். இப்படி திறந்துவிடப்படும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.
புதிய நீர்த்தேக்கம்
இப்படி கோடைக்காலத்தில் ஏரி வறண்டு விடுவதும், பலத்த மழைக்கு பின் திறந்து விடும் தண்ணீர் வீணாக கடலில் கலப்பதையும் தவிர்த்து புதிய நீர்த்தேக்கம் அமைக்க தமிழக நீர்வள ஆதார துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி திருவள்ளூர் அருகே உள்ள ராமஞ்சேரியில் ரூ.700 கோடி செலவில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க நீர்வள ஆதாரத்துறை திட்டம் வகுத்துள்ளது. இதே போல் பூண்டி ஏரியின் உயரத்தை உயர்த்தி கூடுதலாக 2 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.6 கோடி செலவில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கான திட்ட அறிக்கையை ஒரு வாரத்துக்குள் நீர்வள ஆதாரத்துறை தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசின் அனுமதிக்கு பிறகு இந்த பணிகள் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.