ஜெயங்கொண்டம்,
ஜெயங்கொண்டத்தில் பல்வேறு பகுதியில் நடிகர் விஜய் நடித்த சர்கார் பட விளம்பர பதாகைகளை விஜய் ரசிகர்கள் வைத்திருந்தனர். இந்நிலையில் ஜெயங்கொண்டம் -சிதம்பரம் ரோடு அருகே உள்ள திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டிருந்த பதாகைகளை நேற்று மாலை நகராட்சி பணியாளர்கள் மற்றும் போலீசார் அகற்ற வந்தனர். இதற்கு விஜய் ரசிகர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து அவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது நகராட்சி பணியாளர்கள் பதாகைகளை அகற்றி நகராட்சி லாரியில் ஏற்றினர். இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் சிதம்பரம்- ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார், பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ரசிகர்கள் தாங்களாக முன்வந்து அங்கு வைத்திருந்த பதாகைகளை அகற்றினர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. மேலும் அங்குள்ள திரையரங்கில் 6 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது. இச்சம்பவத்தால் சிதம்பரம்- ஜெயங்கொண்டம் சாலையில் மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.