மாவட்ட செய்திகள்

கழிவுநீர் வாய்க்கால்களில் குப்பைகளை கொட்டினால் அபராதம் கவர்னர் கிரண்பெடி உத்தரவு

புதுச்சேரியில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்களில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டுமென கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வார இறுதி நாட்களில் பல்வேறு இடங்களுக்கு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதேபோல் புதுவை மாநிலத்தின் நீர் வளத்தை பாதுகாப்பதற்காக ஏரி மற்றும் குளங்களை தூர்வார பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை முன்னிட்டு நகர் மற்றும் கிராமப்புறங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க கவர்னர் கிரண்பெடி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக உள்ளாட்சி துறை, பொதுப்பணித்துறை, நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் தீபாவளி பண்டிகையை விடுமுறைக்கு தனது சொந்த ஊருக்கு செல்லாமல் புதுவையில் தங்கியிருந்து கழிவுநீர் கால்வாய்களை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீர் ஆய்வு மேற்கொள்வேன் என அறிவித்திருக்கிறார். மேலும் பருவமழையை எதிர்கொள்வதற்காக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டுமெனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்தநிலையில் புதுச்சேரியில் கழிவுநீர் கால்வாய்களில் பொதுமக்கள் குப்பைகள் கொட்டினால் அவர்களுக்கு அதிக அபராதம் விதிக்க வேண்டும் என்ற உத்தரவினையும் கவர்னர் கிரண்பெடி பிறப்பித்துள்ளார்.

SCROLL FOR NEXT