ஸ்ரீவில்லிபுத்தூர்,
விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேரை ஒரு வாரம் காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு அனுமதி வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு உத்தரவிட்டது.
பாலியல் வன்கொடுமை
விருதுநகர் இளம்பெண் ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் 4 பேர் மதுரை சிறையிலும், 18 வயதிற்கு உட்பட்ட 4 பேர் ராமநாதபுரம் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கை தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசி தலைமையிலான படையினர் விசாரித்து வருகிறார்கள். கைதானவர்களில் சிறையில் அடைக்கப்பட்ட 4 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு நேற்று நீதிபதி கோபிநாத் முன்பு விசாரணைக்கு வந்தது.
அனுமதி
இதையொட்டி, மதுரை சிறையில் இருந்து ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் ஆகிய 4 பேரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர்.
அவர்களை நீதிபதி விசாரித்தார். பின்னர் 4 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து 4 பேரும் விருதுநகர் அழைத்துச்செல்லப்பட்டனர். இந்த வழக்கு விசாரணையையொட்டி ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.