மாவட்ட செய்திகள்

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொக்லைன் எந்திரம் உதவியுடன் மின்சார சீரமைப்பு பணிகள் தீவிரம்

புயலால் பாதிக்கப்பட்ட கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் மின்சார சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கீரமங்கலம்,

கஜா புயல் தாக்கியதால் மரங்கள் விழுந்ததில் மின்கம்பங்களும், மின்மாற்றிகளும் உடைந்து சேதமடைந்தது. அதனால் முற்றிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பல கிராமங்கள் இருளில் மூழ்கியதுடன் குடிதண்ணீர் பிரச்சினை ஏற்பட்டது. அதனால் வெளியூர்களில் இருந்து ஜெனரேட்டர்கள் வரவழைக்கப்பட்டு பொதுமக்களின் குடிதண்ணீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்கும் பல கிராம ஊராட்சிகள் செலவுகளை ஏற்காததால் அந்தந்த பகுதி பொதுமக்களே செலவுகள் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம், ஆவணத்தான்கோட்டை உள்ளிட்ட மின்வாரிய அலுவலகங்களுக்கு பல மாவட்டங்களில் இருந்தும் வந்துள்ள மின்வாரிய ஊழியர்கள் அனைத்து கிராமங்களிலும் பொக்லைன், டிராக்டர் போன்ற எந்திரங்களின் உதவியுடன் மின்கம்பங்களை நட்டு மின்கம்பிகளை பொருத்தி ஒவ்வொரு நாளும் ஒரு பகுதிக்கு மின்சாரம் வழங்கி வருகின்றனர். இதே வேகத்தில் சீரமைப்பு பணிகள் சென்றால் விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் மின்சாரம் கிடைக்கும் என்று பொதுமக்கள் கூறினர்.

SCROLL FOR NEXT