நெல்லை,
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் நெல்லை பாளையங்கோட்டையில் சட்டக்கல்லூரி முன்பு நேற்று மதியம் ஸ்டெர்லைட் ஆலையை கண்டித்து சட்டக்கல்லூரி மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தை கண்டித்தும், அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு தனிச்சட்டம் இயற்ற வலியுறுத்தியும், கடந்த போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.