மும்பை,
நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். நடிகரின் மரணம் குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் சாந்தாகுருஸ் டி.ஆர்.டி.ஓ. விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று காலை 10.15 மணியளவில் அங்கு விசாரணைக்காக ரியா சக்கரபோர்த்தியின் சகோதரர் சோவிக் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் தீவிர நடத்தினர். ரியாவின் குடும்பத்தை சேர்ந்தவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் முதல் முறையாக விசாரணை நடத்தி உள்ளனர்.
முன்னதாக சி.பி.ஐ. அதிகாரிகள் சுஷாந்த் சிங் பிணமாக மீட்கப்பட்ட போது அவருடன் வீட்டில் இருந்த நண்பர் சித்தார் பிதானியிடம் 7-வது நாளாக நேற்று காலை விசாரித்தனர். ஏற்கனவே நேற்று முன்தினமும் அதிகாரிகள் அவரிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தியிருந்தனர்.
இதேபோல அதிகாரிகள் நடிகர் வீட்டின் சமையல்காரர் நீரஜ் சிங், வேலைக்காரர் தீபேஜ் சாவந்த் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. இதுதவிர நடிகர் சுஷாந்த் சிங் நீண்ட காலமாக தங்கிவந்த வாட்டர்ஸ்டோன் ரெசார்ட் மேலாளரிடமும் சி.பி.ஐ. விசாரணை நடத்தி உள்ளது. மேலும் சுஷாந்த் சிங் உடலுக்கு பிரேத பரிசோதனை நடந்த கூப்பர் ஆஸ்பத்திரியிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
இதேபோல நடிகர் சுஷாந்த் சிங் வங்கி கணக்கில் பண மோசடி நடந்ததாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக அமலாக்கத்துறை ரியா சக்கரபோர்த்தி, அவரது தந்தை, சகோதரரிடம் விசாரணை நடத்தி உள்ளது. இந்தநிலையில் நேற்று ரியாவின் தந்தை இந்திரஜித் வீட்டில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், அமலாக்கத்துறை கேட்டு கொண்டதன் பேரில், ரியாவின் தந்தையை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்து செல்கிறோம்'' என்றார்.