தூத்துக்குடி,
தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம் தலைமையில் விவசாயிகள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள விவசாயிகளின் நீண்டகால பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் வட்டம் சிங்கத்தாகுறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் தமிழக அரசின் கடன் தள்ளுபடியில் மோசடி நடைபெற்றுள்ளது. விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய கடன் தள்ளுபடியை மோசடியாக வேண்டிய சிலருக்கு மட்டும் கிடைக்கும் வகையில் ஆவணங்கள் தயார் செய்துள்ளனர். கடன் தள்ளுபடி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்த உண்மையான விவசாயிகள் ஏமாற்றமடைந்து உள்ளனர்.
நடவடிக்கை
எனவே, இந்த விஷயத்தில் மாவட்ட கலெக்டர் தலையிட்டு மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மையான விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், கடன் கேட்டு விண்ணப்பம் செய்து காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக கடன் வழங்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.