நாகப்பட்டினம்,
தீபாவளி பண்டியையொட்டி, உணவு விற்பனை செய்யும் நிறுவனங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மாநில உணவு பாதுகாப்பு ஆணையர் அமுதா உத்தரவிட்டார். அதன்பேரில் இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனை செய்யும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து உணவு விற்பனை நிலையங்களில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக நாகை மருந்துகொத்தள தெருவில் செயல்பட்டு வரும் ஒரு ரேஷன் கடையில் உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆய்வு செய்தார்.
இதில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட மளிகை பொருட்களில் தயாரிப்பு தேதி இல்லை என்றால் அதனை விற்பனை செய்யக்கூடாது. மழை காலங்களில் தண்ணீர் ஒழுகும் இடங்களில் உணவு மூட்டைகளை வைக்கக்கூடாது. பூஞ்சைகள் தொற்று ஏற்படா வண்ணம் உணவு மூட்டைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
தொடர்ந்து ரேஷன் கடையில் உணவு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்களிடம், உணவு விற்பனை தொடர்பான புகார்களை 9444042322-என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலமாக மாநில உணவு பாதுகாப்பு ஆணையருக்கு தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.