கோத்தகிரி
கொரோனா காரணமாக காலை 10 வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
கடைகளில் குவிந்த பொதுமக்கள்
கொரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி காய்கறி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் ஊட்டி, கோத்தகிரி பகுதிகளில் உள்ள திறந்தவெளி மார்க்கெட்டுகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
அனைத்து கடைகள் முன்பும் அதிகளவில் கூட்டம் இருந்தது. அவ்வபோது கடைக்காரர்கள் சமூக இடைவெளியே கடைப்பிடிக்குமாறு வாடிக்கையாளர்களை அறிவுறுத்தினர்.
சில இடங்களில் சமூக இடைவெளி காற்றில் பறந்தது. இதனால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. கோத்தகிரி அருகே கட்டபெட்டு பகுதியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் பொதுமக்கள் சமூக இடைவெளியை மறந்து நீண்ட வரிசையில் காத்திருந்ததனர்.
சாலைகள் வெறிச்சோடின
கூடலூர், பந்தலூர் பகுதிகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மளிகை, காய்கறி கடைகள் திறந்து இருந்தது. மேலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதேபோல் சாலைகளில் வழக்கமான நாட்களில் இருப்பதுபோல் வாகனங்களும் ஓடியது. பின்னர் 10 மணிக்கு பிறகு கடைகள் அடைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து மதியத்திற்கு பின்னர் அனைத்து சாலைகளும், போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. போலீசார் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.