கோயம்பேடு பகுதியில் மாயமானவர், கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார். கழுத்தில் துப்பட்டா சுற்றப்பட்டு இருந்ததால் அவர் கொலைசெய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சென்னை கோயம்பேடு, சிவன் கோவில் பகுதியை சேர்ந்தவர் உமாசங்கர் (வயது 57). கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், பின்னர் மாயமானதாக அவருடைய மனைவி உமா (52) கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அவரது வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் உமாசங்கர் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்துவந்த கோயம்பேடு போலீசார், 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் இருந்து அவரது உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
பின்னர் கோயம்பேடு தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன், கிணற்றில் மிதந்த உமாசங்கர் உடலை மீட்டனர். அப்போது உமாசங்கரின் கழுத்தில் துப்பட்டா சுற்றப்பட்டு இருந்தது. பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சினையில் உமாசங்கர், கிணற்றில் உள்ள தூணில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தபோது, பாரம் தாங்காமல் அவரது உடல் கிணற்றில் விழுந்து விட்டதா? அல்லது யாராவது அவரை துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு உடலை கிணற்றில் வீசினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.