சென்னை,
வெயில் உக்கிரமாக இருக்கும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் கோடை வெயில் வறுத்து எடுக்கும். கடந்த வருடம் தமிழகத்தில் இந்த காலத்தில் வெயில் அதிகமாக இருந்தது.
ஆனால் இந்த வருடம் அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. அதன் காரணமாக வழக்கமாக கொளுத்தும் வெயில் குறைந்தே காணப்பட்டது. ஆனாலும் திருத்தணி, வேலூர், மதுரை, திருச்சி, கரூர் ஆகிய இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியது.
சென்னை நகரை பொறுத்தவரை இதற்கு முந்தைய ஆண்டுகளில் வழக்கமாக அக்னி நட்சத்திர காலத்தில் 104, 105 டிகிரி வெளியில் கொளுத்தும். ஆனால் இந்த ஆண்டு 100 டிகிரியை எட்டாமலேயே சென்னை நகரம் தப்பியது. அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 9-ந் தேதி 98.6 டிகிரி வெயில் பதிவானது.
நுங்கம்பாக்கத்தில் வெயில் 100 டிகிரியை எட்டவில்லை என்றாலும், சென்னை புறநகரான மீனம்பாக்கத்தில் ஒரு சில நாட்களில் 100 டிகிரியை எட்டியது.
தமிழகத்தில் இந்த பருவத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 108.6 டிகிரி வெயில் சுட்டெரித்தது. அக்னி நட்சத்திர இறுதி நாளான நேற்று திருத்தணியில் 105 டிகிரியும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 97.16 டிகிரியும் வெயில் பதிவானது.