திருவாரூர்,
தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்வெண்ணியில் இருந்து நீடாமங்கலம், கொரடாச்சேரி, திருவாரூர் வழியாக ஆண்டிப்பாளையம் வரையில் 35 கிலோ மீட்டர் தூரம் சாலை திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் திருவாரூர் மாவட்ட தி.மு.க., வர்த்தக-சேவை அமைப்புகள் சார்பில் திருவாரூர், கொரடாச்சேரி, நீடாமங்கலம் ஆகிய 3 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
அப்போது மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பின்னர் இரவு விடுதலை செய்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட தி.மு.க செயலாளர் பூண்டி கலைவாணன், நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் கலியபெருமாள், முன்னாள் நகரசபை துணைத்தலைவர் செந்தில், வர்த்தக சங்க தலைவர் பாலமுருகன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட அமைப்பு செயலாளர் அருள், திருவாரூர் வளர்ச்சி ஆலோசனை குழுமத்தின் தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசு தரப்பில் உதவி கலெக்டர் முத்துமீனாட்சி, துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமாறன், தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் தொழில்நுட்ப மேலாளர் சந்திரசேரகன், தஞ்சை-நாகை சாலையை இருவழிச்சாலையாக அமைக்கும் பணிக்கான ஒப்பந்த நிறுவனத்தின் திட்ட துணை மேலாளர் சிங்காரவேல், நெடுஞ்சலைத்துறை கோட்ட பொறியாளர் அமிர்தலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது தேசிய நெடுஞ்சாலையில் திருவாரூர் மாவட்டத்தின் வழியாக செல்லும் 35 கிலோ மீட்டர் சாலையை சீரமைக்க தஞ்சை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலமாக ரூ.12 கோடியே 10 லட்சம் உத்தேச மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசிடம் இருந்து ஒரு மாதத்திற்குள் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு சாலை முழுமையாக செப்பனிடப்படும். தற்போது அந்த தனியார் நிறுவனம் வருகிற 20-ந் தேதிக்குள் சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைத்து தருவதாக உறுதியளிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை முடிவில் அனைவரும் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜை நேரில் சந்தித்து பேசினர். அப்போது சமாதான பேச்சுவார்தையை தி.மு.க., வர்த்தக-சேவை அமைப்புகள் ஏற்றனர்.
பின்னர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பூண்டி கலைவாணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், வருகிற 20-ந் தேதிக்குள் சாலையை சீரமைக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.