பெங்களூரு,
ராமநகர் உள்பட 5 தொகுதிகளுக்கு கடந்த 3-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) சார்பில் முதல்-மந்திரியின் மனைவி அனிதா குமாரசாமி போட்டியிட்டார். அவர் 1 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த நிலையில் அனிதா குமாரசாமி நேற்று எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றார். பெங்களூரு விதான சவுதாவில் உள்ள சபாநாயகர் அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. சபாநாயகர் ரமேஷ்குமார் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்ற பிறகு அனிதா குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ராமநகர் தொகுதியில் என்னை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வாக்காளர்கள் வெற்றி பெற வைத்தனர். இதற்காக அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனது தொகுதியில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சி சய்வேன் என்றார்.
அனிதா குமாரசாமி, எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றதின் மூலம், கர்நாடக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கணவர் முதல்-மந்திரியாகவும், மனைவி எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.