திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் இக்கோவிலில் கார்த்திகை மாதத்தில் வரும் தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அதுமட்டுமின்றி பல்வேறு பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) விழா தொடங்கி 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் மாலையில் திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட உள்ளது.
10-ந் தேதி பராசக்தி அம்மன் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வாண வேடிக்கைகளுடன் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. 11-ந் தேதி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 12-ந் தேதி கெஜலட்சுமி அலங்காரமும், 13-ந் தேதி மனோன்மணி அலங்காரமும், 14-ந் தேதி ரிஷப வாகனத்தில் அலங்காரமும், பஞ்சமூர்த்திகள் அபிஷேகமும் நடக்கிறது.
15-ந் தேதி ஆண்டாள் அலங்காரமும், 16-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 17-ந் தேதி லிங்க பூஜை அலங்காரமும், 18-ந் தேதி மகிஷோசூரமர்த்தினி அலங்காரமும் செய்யப்பட உள்ளது. மேலும் அன்று சரஸ்வதி பூஜையும், உண்ணாமலை அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும் நடக்கிறது.
19-ந் தேதி விஜயதசமியன்று காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகமும், பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.