நெல்லை,
சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் நெல்லை மாவட்டத்திலும் பரவியது. நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 56 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனைவரும் அனுமதிக்கப்பட்டு, பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த சிலரும் இங்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதில் நல்ல முறையில் குணமடைந்தவர்களுக்கு அடுத்தடுத்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. கொரோனா வைரஸ் இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள், ஆஸ்பத்திரியில் இருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
நேற்று மேலும் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கடந்த 8ந்தேதி சமூகரெங்கபுரத்தை சேர்ந்த ஒருவர் முதன் முதலாக கொரோனா நோயாளியாக சேர்ந்தவர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த 14ந்தேதி 13 பேரும், நேற்று முன்தினம் 5 பேரும் வீடு திரும்பினர்.
இந்தநிலையில் நேற்று பாளையங்கோட்டை, பத்தமடையை சேர்ந்த 4 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து இதுவரை மொத்தம் 23 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர்.