புதுச்சேரி,
புதுவை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்வதில் ஆரம்பம் முதல் சிக்கலாக இருந்தது. கடந்த பிப்ரவரி மாதம் கவர்னர் கிரண்பெடி தலைமையில் மாநில திட்டக்குழு கூடி மாநிலத்தின் பட்ஜெட் ரூ.7ஆயிரத்து 530 கோடி என்று இறுதி செய்தது. இதற்கு அனுமதி பெற வேண்டி பட்ஜெட் தொடர்பான கோப்புகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. ஆனால் இதில் பல்வேறு சந்தேகங்களை மத்திய அரசு எழுப்பியது. அதற்கு புதுவை அரசு தரப்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
பட்ஜெட்டுக்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் புதுவை சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. கடந்த (ஜூன்) மாதம் 4, 5-ந்தேதி ஆகிய 2 நாட்கள் மட்டுமே நடந்தது. பட்ஜெட்டிற்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததால் சட்டசபை கூட்டத்தொடர் அப்போது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின் முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்று உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசி பட்ஜெட்டிற்கு ஒப்புதல் பெற்று வந்தார்.