திருச்சி, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனைக்கு லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கியதாக அமைச்சர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் அவர்களின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் குட்கா மற்றும் புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறதா? என சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள், திருச்சி மெயின்கார்டு கேட் பகுதியில் உள்ள பெட்டிக்கடை மற்றும் கடைகளில் சோதனை நடத்தி 50 கிலோ எடையுள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் மொபட்டில் ஒருவர் புகையிலை உள்ளிட்ட போதை பொருட்களை ஒரு சாக்குப்பையில் கொண்டு வந்தபோது, அதிகாரிகள் சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், போதை பொருட்கள் கொண்டு வந்தது திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்த சிவகுமார்(வயது30) என்பது தெரியவந்தது. பின்னர் அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று காலை திருச்சி பெரியகடை வீதி நடுகுஜிலி தெருவில் உள்ள வீட்டின் மாடியில் மூட்டை, மூட்டையாக குட்கா, புகையிலை உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சித்ராவுக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து அவரது தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்டாலின், முத்துராஜா ஆகியோர் அடங்கிய 7 பேர் கொண்ட குழுவினர் குறிப்பிட்ட வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொண்டனர்.