மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி இரட்டை கொலை வழக்கு: நாகர்கோவில் கோர்ட்டில் வாலிபர் சரண்

தூத்துக்குடி இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் நாகர்கோவில் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

நாகர்கோவில்,

தூத்துக்குடி மாவட்டம் சிவந்தாகுளம் 2-வது தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 40), கப்பல் என்ஜினீயர். கடந்த 15-ந் தேதி முருகேசன் தனது தெருவில் நின்றபோது மோட்டார் சைக்கிளில் ஒருவர் வேகமாக சென்றுள்ளார்.

இதை முருகேசன் தட்டி கேட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் முருகேசனும், அவருடைய நண்பர் விவேக் என்பவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.

கோர்ட்டில் சரண்

இந்த நிலையில் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடி முனுசாமிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் (21) என்பவர் நேற்று நாகர்கோவிலில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 1-வது கோர்ட்டில் சரண் அடைந்தார்.

இதைத் தொடர்ந்து மணிகண்டனை வருகிற 19-ந் தேதிக்குள் (அதாவது நாளை) தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி கிறிஸ்டியன் உத்தரவிட்டார். அதுவரையிலும் மணிகண்டனை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஜெயிலில் அடைக்கும்படியும் கூறினார்.

SCROLL FOR NEXT