திருச்சி,
திருச்சி நகரில் பொன்மலை உள்ளிட்ட பகுதிகளில் தனியாக நடந்து சென்ற பெண்களிடம் தாலி சங்கிலி மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிள்களில் வந்து கைவரிசை காட்டிய இந்த கொள்ளையர்களை பிடிக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்படி தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் பொன்மலை கம்பி கேட் அருகே வாகன தணிக்கை செய்தனர்.
போலீஸ்காரர்
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் அவர்கள் உறையூரை சேர்ந்த மணிவண்ணன் (வயது 24), பாண்டி என்கிற பாண்டீஸ்வரன் (24) எனவும், அவர்கள் தனியாக சென்ற பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதும் கண்டு பிடிக்கப்பட்டது.
அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மணிவண்ணன் திருச்சி சிறப்பு காவல்துறை முதலாம் அணியில் போலீஸ்காரர் ஆக வேலை செய்து வந்ததும், பின்னர் விட்டோடியாக (விட்டோடி என்பது தொடர்ந்து 21 நாட்களுக்கு மேல் பணிக்கு வராமலும், விடுப்பு பற்றி தகவல் தெரிவிக்காமல் இருந்தால் அவர்களுக்கு காவல்துறை பதிவேட்டில் இப்படி குறிப்பிடப்படுகிறது) அறிவிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.
8 இடங்களில்...
இவர்கள் இருவரும் சேர்ந்து செந்தண்ணீர்புரம் டீசல் லோகோ செட், யானை பார்க் வளைவு, பொன்மலைப்பட்டி கல்யாண மண்டபம், பொன்மலை நார்த் டி பணிமனை, பொன்மலைப்பட்டி புதுப்பாலம், பொன்மலைப்பட்டி கடை வீதி ஆகிய இடங்களிலும், அரியமங்கலம் ரெயில் நகர் மாநகராட்சி பள்ளி அருகேயும், உறையூர் குழுமணி ரோடு ஸ்டேட் வங்கி காலனி அருகே என மொத்தம் 8 இடங்களில் பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்தனர்.
34 பவுன் நகைகள் பறிமுதல்
இதனை தொடர்ந்து மணிவண்ணனையும், பாண்டீஸ்வரனையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிட மிருந்து சங்கிலி பறிப்பிற்கு பயன்படுத்திய ஒரு அதிவேக மோட்டார் சைக்கிள் மற்றும் 34 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் கைப்பற்றப்பட்ட நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளின் மதிப்பு ரூ. 6 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். கைது செய்யப்பட்ட இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.