மாவட்ட செய்திகள்

திருவாரூர், நீடாமங்கலத்தில் 5-வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் வேலைநிறுத்தம்

திருவாரூர், நீடாமங்கலத்தில் 5-வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூரில், 5-வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்திட வேண்டும். பயனுள்ள மடிக்கணினி, இணையதள வசதி செய்து தர வேண்டும். அலுவலக கட்டிடத்தில் குடிநீர், மின்சாரம், கழிவறை வசதி செய்து தர வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்து வரும் இந்த போராட்டம் நேற்று 5-வது நாளாக நடந்தது. திருவாரூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் வட்ட தலைவர் மாரிமுத்து தலைமை தாங்கினார். இதில் திரளான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதேபோல நேற்று 5-வது நாளாக கிராம நிர்வாக அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி நீடாமங்கலம் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். இதில் வட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கடந்த 5 நாட்களாக வருவாய்த்துறை தொடர்பான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

SCROLL FOR NEXT