மாவட்ட செய்திகள்

மணப்பாறை அருகே வினோதம்: விபத்தில் இறந்த சிறுமிக்கு கோவில் கட்டி திருவிழா நடத்தும் பெற்றோர்

மணப்பாறை அருகே, விபத்தில் பலியான சிறுமி தனுஜாவுக்கு, பெற்றோர் கோவில் கட்டி திருவிழா நடத்தி வருகின்றனர்.

மணப்பாறை,

மணப்பாறை அருகே உள்ள வெள்ளையம்மாபட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. தையல் தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு காவியா, தனுஜா ஆகிய 2 பெண் குழந்தைகள். கடந்த 2007-ம் ஆண்டு குழந்தைகள் இருவருக்கும் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குழந்தைகள் மற்றும் மனைவியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு மணப்பாறையில் உள்ள மருத்துவமனைக்கு பழனிச்சாமி சென்று கொண்டிருந்தார். பன்னாங்கொம்பு அருகே சென்றபோது அந்த வழியாக வந்த பால் வேன் மோதியதில் தனுஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். அப்போது அவருக்கு வயது 4 ஆகும்.

தனுஜாவின் இறுதிச்சடங்கு முடிந்தபின் 9-ம் நாள் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் ஈம காரியங்களை பெற்றோர் செய்து கொண்டிருந்தனர். அப்போது வேத மந்திரங்கள் கூறிக்கொண்டிருந்த அய்யர், தனுஜா குரலில் பேசியதாகவும், தனக்கு ஈம காரியங்கள் செய்ய வேண்டாம், 3 ஆண்டுகளில் நான் தெய்வமாக வீட்டிற்கு வருவேன் எனவும் அருள் வாக்கு கூறினாராம். அவர் கூறியது போலவே, பழனிச்சாமியின் தம்பி பாலு, சிறுமி தனுஜா போல பேசி தனக்கு கோவில் கட்டி திருவிழா நடத்தி, பால்குடம் எடுத்து பூக்குழி இறங்க வேண்டும் என கூறியுள்ளார்.

திருவிழா

அதன்பேரில், தனுஜாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து பழனிச்சாமி வீடு அருகே கோவில் கட்டி தனுஜாவுக்கு சிலையும் வைத்தனர். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பால்குடம் மற்றும் பூக்குழி இறங்கும் திருவிழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் நேற்று காலை வெள்ளையம்மாபட்டி மூக்கரை பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. பின் கோவில்முன் பூக்குழி இறங்கி தனுஜாவின் சிலைக்கு பாலாபிஷேகம் மற்றும் பல்வேறு வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதில் வெள்ளையம்மாபட்டி, பின்னத்தூர், பன்னாங்கொம்பு, பலவாரப்பட்டி, கலிங்கப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT