வண்டலூர்,
சென்னை வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் வருகிற 6-ந்தேதி (புதன்கிழமை) அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திரமோடி மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு ஒரே மேடையில் பேச உள்ளனர்.
இதற்காக பிரமாண்டமான மேடை மற்றும் 3 இடங்களில் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் வடக்கு மண்டல போலீஸ் டி.ஐ.ஜி. தேன்மொழி, காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானி, வண்டலூர் டி.எஸ்.பி. வளவன் ஆகியோருடன் பாதுகாப்பு பணிகள், போக்குவரத்தை சீர் செய்வது குறித்தும் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினர்.
அப்போது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, பென்ஜமின், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மாவட்டச்செயலாளர்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன், வாலாஜாபாத் கணேசன், திருக்கழுக்குன்றம் ஆறுமுகம், எம்.பி.க்கள் மரகதம் குமரவேல், கே.என்.ராமச்சந்திரன், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம், ஒன்றியச்செயலாளர் கவுஸ் பாஷா, ஊரப்பாக்கம் கபில் என்கிற கமலக்கண்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.