மாவட்ட செய்திகள்

போராட்டம் நடத்திய வனத்துறை ஊழியர்கள் 6 பேர் பணியிடை நீக்கம்

போராட்டம் நடத்திய வனத்துறை ஊழியர்கள் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

புதுச்சேரி,

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை வனத்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களை அலுவலக வளாகத்தை சுத்தம் செய்யுமாறு அதிகாரிகள் தெரிவித்ததாக தெரிகிறது. இந்தநிலையில் வனத்துறை அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் முக கவசம், கையுறை, கிருமிநாசினி உள்ளிட்டவை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த ஊழியர்கள் வனத்துறை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்ததும்போலீசார் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினர்.

இந்தநிலையில் ஊரடங்கை மீறி போராட்டம் நடத்தியதாக ஊழியர்கள் மீது வனத்துறை அதிகாரி புகார் செய்தார். அதன்பேரில் உருளையன்பேட்டை போலீசார் 33 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து வனத்துறை ஊழியர்களான லாரன்ஸ், கார்த்திகேயன், வாழுமுனி, அகில்தாசன், செந்தில்குமார், எம்.கார்த்திகேயன் ஆகிய 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஊழியர்கள் வனத்துறை அலுவலகத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் விரைந்து சென்று ஊழியர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச்செயலாளர் லட்சுமணசாமி அங்கு வந்து வனத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி ஊழியர்களின் பிரச்சினையை தீர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு