ஈத்தாமொழி,
ஈத்தாமொழி அருகே மது குடித்தபோது ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளியை அடித்து கொலை செய்த தம்பியை போலீசார் கைது செய்தனர். மேலும், 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாலிபர் பிணம்
குமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே உள்ள புதூர் காலியாயன்விளைய சேர்ந்தவர் திருமலை பெருமாள் என்ற கண்ணன். இவர், அதே பகுதியில் தும்பு ஆலை வைத்து நடத்தி வருகிறார். அவர் நேற்று காலை வழக்கம்போல் ஆலைக்கு வந்தார்.
அப்போது ஆலையின் வளாகத்துக்குள் ஒரு வாலிபர் காயங்களுடன் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே, இதுபற்றி ஈத்தாமொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அடித்து கொலை
இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜா, ஈத்தாமொழி சப்-இன்ஸ்பெக்டர் பொன்கீதா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜயேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை பார்வையிட்டனர். அங்கு பிணத்தின் அருகில் ஒரு பெரிய மரக்கட்டை கிடந்தது. நள்ளிரவில் யாரோ அந்த வாலிபரை மரக்கட்டையால் அடித்து கொலை செய்தது தெரிந்தது.
இதையடுத்து மோப்ப நாய் ஏஞ்சல் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் ஏஞ்சல் பிணம் கிடந்த பகுதியில் இருந்து செம்பொன்கரை ஆற்றங்கரை வரை சென்று நின்றது. தடயவியல் நிபுணர் ஜீவானந்தம் அங்கிருந்த கைரேகைகளை சேகரித்தார்.
மதுகுடித்தபோது தகராறு
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் நங்கூரான்பிலாவிளையை சேர்ந்த கண்மணி என்பவரது மகன் ஈஸ்வரன் (வயது 30) என்பதும், அவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
ஈஸ்வரன் மற்றும் அவருடைய சகோதரர்கள் ராஜேஷ்(27), வினோ(25) மற்றும் ஈஸ்வரனின் நண்பர்களான செம்பொன்கரையை சேர்ந்த ஜெகதீஷ்(28), நாகராஜன்(35) ஆகியோர் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு அங்கு மது குடித்துள்ளனர்.
அப்போது, ஈஸ்வரனுக்கும் அவருடைய சகோதரர் வினோவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வினோ அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து ஈஸ்வரனை தாக்கி கொலை செய்ததுள்ளது தெரியவந்தது.
3 பேரிடம் விசாரணை
இதையடுத்து போலீசார் வினோவை கைது செய்தனர். சம்பவம் நடந்த போது வினோவுடன் இருந்த ராஜேஷ், ஜெகதீஷ், நாகராஜன் ஆகியோரையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுபோதை தகராறில் அண்ணனை உடன் பிறந்த சகோதரரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.