மாவட்ட செய்திகள்

தனியார் வேலை வாய்ப்பு முகாம்களை படித்த இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

தனியார் வேலை வாய்ப்பு முகாம்களை படித்த இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் நிர்மல்ராஜ் கூறினார்.

திருவாரூர்,

திருவாரூரில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒரு தனியார் பள்ளியில் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் கலந்து கொண்டு வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் நடத்தப்படும் இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 32 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. தமிழக அரசின் உத்தரவின்படி வேலைவாய்ப்பின்றி உள்ள இளைஞர்களை தேடி அவர்களின் இருப்பிட அருகாமையிலேயே வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதனால் பல்வேறு கட்டங்களில் உள்ள இளைஞர்கள் முழுமையாக வேலைவாய்ப்பு பெற முடிகிறது.

பணி நியமன ஆணை

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 1,284 பேர் கலந்து கொண்டனர். இதில் 627 பேர் பணி நியமன ஆணைகளை பெற்றனர். இதுபோன்ற வேலை வாய்ப்பு முகாம்களை படித்த இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதில் உதவி கலெக்டர் முருகதாஸ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செல்லதுரை, தொழிலாளர் நல அலுவலர் பாஸ்கரன், தாசில்தார் ராஜன்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.