செய்திகள்

சேலத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் பிரேமலதா சந்திப்பு

சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து பேசினார்.

சேலம்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் கோவையில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு இரவு சேலம் திரும்பினார்.

இந்தநிலையில், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்ட தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று காலை சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் தங்கியிருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். அப்போது அவர் முதல்-அமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்தார்.

பின்னர், அவர்கள் இருவரும் சிறிது நேரம் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், தேர்தல் பணிகள் மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்தும் ஆலோசனை செய்ததாக கூறப் படுகிறது.

இந்த சந்திப்பின்போது, கள்ளக்குறிச்சி தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளராக போட்டியிடும் எல்.கே.சுதீஷ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் உடனிருந்தனர்.