கோட்டூர்,
கோட்டூர் அருகே திருக்களார் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 780 ஏக்கர் நிலத்தில் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. வடக்கே பொண்ணுக்கொண்டன் ஆற்று கரை, தெற்கே சாளுவனாற்றின் கரை, மேற்கே பன்னியூர் கிராமத்தின் வடிகால் ஆற்றின் கரை, கிழக்கே காடுவாகொத்தமங்கலம் கிராமத்தின் வடிகால் ஆற்றின் கரை என 4 பக்கமும் திருக்களார் கிராமம் கரைகளால் சூழப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர் ஆகிய மழைக்காலங்களில் பொண்ணுக்கொண்டான் ஆறும், சாளுவனாறும் வெள்ளப்பெருக்கெடுத்து கரைகள் உடைப்பதால் திருக்களார் கிராமத்தில் சாகுபடி செய்த பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி விடுகின்றன.
இந்தநிலையில் திருக்களார் கிராமத்தின் வடிகால் வாய்க்கால் 30 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மேடாக இருப்பதால் பயிரில் மூழ்கிய தண்ணீர் வடிய பல மாதங்கள் ஆகின்றன.
இதனால் பயிர்கள் அழுகி ஒட்டுமொத்த விவசாயமும் வீணாகிறது. இந்த நிலை ஆண்டுதோறும் தொடர்ந்து நீடிப்பதால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.
எனவே திருக்களார் போலீஸ் நிலையத்தில் இருந்து பழம்பாண்டி ஆறு வரை 7 கிலோ மீட்டர் தூரம் திருக்களார் வடிகால் வாய்க்காலை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இந்த வடிகாலை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தமிழக அரசு அறிவித்துள்ள குடிமராமத்து பணிகளில் சேர்த்து வருகிற 15-ந் தேதிக்குள் திருக்களார் வடிகாலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை எனில் அனைத்து கட்சிகளை ஒன்றிணைத்து தொடர் போராட்டம் நடத்துவோம் என அப்பகுதி கிராம மக்கள் கூறினர்.