புதுடெல்லி,
மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் 350 பேருக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின் முடிவில் 1,300 மத்திய போலீஸ் படையினர் இந்த பாதுகாப்பு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். சில தலைவர்களுக்கு அந்தந்த மாநில போலீசார் பாதுகாப்பு அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனாலும் இன்னும் 3 ஆயிரம் மத்திய போலீஸ் படையினர் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய போலீஸ் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ள முக்கிய பிரமுகர்களில் இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பில் இருந்த உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், இசட் பிரிவு பாதுகாப்பில் இருந்த லாலுபிரசாத் யாதவ், பா.ஜனதா முன்னாள் எம்.பி.க்கள் ராஜீவ் பிரதாப் ரூடி, கீர்த்தி ஆசாத், சத்ருகன்சின்ஹா, இமாசலபிரதேச கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா, முன்னாள் சபாநாயகர் மீராகுமார், பிரணாப் முகர்ஜியின் 2 பேத்திகள், ஒரு பேரன், மன்மோகன் சிங்கின் மகள் மற்றும் பேரன் ஆகியோர் அடங்குவார்கள். மற்றவர்களுக்கான பாதுகாப்பு குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.