புதுடெல்லி,
தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தியது.
கூட்டத்திற்கு தேசியக் கட்சிகள் மற்றும் 51 மாநில அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்து இருந்தது.
கூட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, மதசார்பற்ற ஜனதா தளம், தெலுங்கு தேசம், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்டீரிய ஜனதா தளம் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் இவிஎம் இயந்திரங்களை சுற்றிய சந்தேகங்களையே எழுப்பின என தகவல்கள் தெரிவித்தன. சட்ட வரையறை இல்லாமல் பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடக்காது என்ற தன்னுடைய நிலையை தெளிவுப்படுத்தியது தேர்தல் ஆணையம்.
இந்நிலையில் 70 சதவித அரசியல் கட்சிகள் வாக்குச்சீட்டு முறையிலான தேர்தலையே விரும்புகிறது என காங்கிரஸ் கூறியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி பேசுகையில், 70 அரசியல் கட்சிகள் வாக்குச்சீட்டு முறையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றே தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளன. பா.ஜனதா தனிமைப்படுத்தப்பட்டது, என கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்களில் இவிஎம்களில் எழுந்த பிரச்சனைகள் தொடர்பாக அரசியல் கட்சிகள் கவலையை எழுப்பின, வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவர வலியுறுத்தின எனவும் குறிப்பிட்டார்.
தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள் செய்யும் செலவுக்கும் வரம்பு கொண்டுவர வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தியது என சிங்வி குறிப்பிட்டார்.