தேசிய செய்திகள்

டெல்லியில் 15 நாட்களில் 807 பேர் மாயம்; கெஜ்ரிவால் அதிர்ச்சி

டெல்லியில் சட்டம் ஒழுங்கு ஐ.சி.யு.வில் உள்ளது என கெஜ்ரிவால் கூறினார்.

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லியின் முன்னாள் முதல்-மந்திரியான கெஜ்ரிவால் கூறும்போது, ஜனவரி 1-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை டெல்லியில் பெண்கள், குழந்தைகள் என 807 பேரை காணவில்லை. அப்படியென்றால், நாளொன்றுக்கு 54 பேர் காணாமல் போயுள்ளனர்.

அவர்களில் பலர் இளம் சிறுமிகள். நாட்டின் தலைநகர் டெல்லியில், மக்களின் பாதுகாப்பு கேள்வியாக உள்ளது. இது அச்சமூட்டும் வகையில் உள்ளது. ஆனால், பா.ஜ.க. அரசு தூங்கி கொண்டிருக்கிறது.

டெல்லியில் குற்றவாளிகள் தெருக்களில் கொலைகளை செய்து விட்டு தப்பி செல்கின்றனர். ஆனால், டெல்லி போலீசின் தலைவரான அமித்ஷா எதுவும் செய்வதில்லை. 4 என்ஜின் கொண்ட அரசு 420 அரசியலில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. டெல்லி மக்களோ அச்சத்தின் நிழலில் வசிக்கின்றனர் என கூறினார்.

டெல்லியில் சட்டம் ஒழுங்கு ஐ.சி.யு.வில் உள்ளது என கூறிய அவர், டெல்லி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். உங்களுடைய குழந்தைகளை நீங்களே கவனம் கொண்டு பாதுகாத்திடுங்கள் என்றும் கூறினார்.