தேசிய செய்திகள்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைதான நடிகை ஹேமா சிறையில் இருந்து விடுதலை

போதைப்பொருட்கள் பயன்படுத்திய வழக்கில் ஜாமீன் பெற்ற நிலையில் தெலுங்கு நடிகை ஹேமா பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் ஹெப்பகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பண்ணை வீட்டில் மது மற்றும் போதை விருந்து நடைபெற்றது. இதுபற்றி அறிந்த குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது 7 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் நடிகை ஹேமாவுக்கு, விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகாததால், போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய உடல் பரிசோதனையில் அவர் போதைப்பொருட்களை பயன்படுத்தியது உறுதியானது. பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். ஜூன் 14-ந் தேதி வரை அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடிகை ஹேமாவுக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இருப்பினும் நடிகை ஹேமா அன்றைய தினம் சிறையில் இருந்து விடுவிக்கப்படவில்லை.

ஜாமீன் தொடர்பான அலுவல் பணிகள் நடைபெற்ற நிலையில் நேற்று நடிகை ஹேமா பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது சிறை வாசலில் நடிகை ஹேமாவின் சகோதரர் காத்திருந்து, அவரை காரில் அழைத்து சென்றார். விசாரணைக்கு அழைக்கும்போது நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் நடிகை ஹேமா விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT