தேசிய செய்திகள்

பெரிய கட்சிகள் எங்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்தின: ஓவைசி விமர்சனம்

பீகாரில் பெரிய கட்சிகள் எங்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்தின என்று அசாதுதின் ஓவைசி விமர்சித்துள்ளார்.

பாட்னா,

பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அசாதுதின் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் (AIMIM) கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும், தேர்தலில் வாக்குகளை ஓவைசியின் கட்சி பிரித்து பாஜகவுக்கு மறைமுகமாக உதவியதாகவும் பாஜகவின் பி டீம் கட்சி எனவும் அங்குள்ள எதிர்க்கட்சிகளால் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஓவைசி கூறியிருப்பதாவது: -அரசியலில் தவறுகளில் இருந்தே பாடம் கற்றுக்கொள்ள முடியும். எங்கள் கட்சியின் பீகார் தலைவர் அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களையும் சந்தித்தார். ஆனால், எங்களுடன் கூட்டணி வைக்க யாருமே தயாராக இல்லை.

பெரிய கட்சிகள் எங்களை தீண்டத்தகாதவர்கள் போல நடத்தின. முஸ்லீம் தலைவர்களையும் நாங்கள் சந்தித்தோம். ஆனால் அதற்கும் எந்த பலனும் கிடைக்கவில்லை. தங்களின் விரக்தியை மறைக்கவே எங்களை பி டீம் எனக் கூறுகிறார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நாங்கள் பீகாரில் அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டோம் என்றார்.

SCROLL FOR NEXT