புதுடெல்லி,
இந்தியா-அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் செய்வது தொடர்பாக சமீபத்தில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இதை சுட்டிக்காட்டி பாராளுமன்ற மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் கடுமையாக விமர்சனம் செய்தார். அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவை மத்திய அரசு விற்றுவிட்டதாக குற்றம்சாட்டினார். இந்தியாவின் நலனில் மத்திய அரசு சமரசம் செய்ததாகவும் கூறினார். இதற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது. ராகுல் காந்தி தவறான தகவல்களை அளிப்பதாக பதிலடி கொடுத்தது. மேலும் அவருக்கு எதிராக மத்திய அரசு உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வரப்படும் என்று பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
இந்த நிலையில், பாராளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிரான தீர்மானம் கொண்டு வர பா.ஜனதா எம்.பி. நிஷிகாந்த் துபே நோட்டீஸ் அளித்தார்.இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:“பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை. கோரோஸ் அறக்கட்டளை, போர்டு அறக்கட்டளை மற்றும் சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் ஆகியவற்றுடன் அவர் எவ்வாறு தொடர்பு கொள்வார்? தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், அமெரிக்கா போன்ற இடங்களுக்கு எவ்வாறு பயணம் செய்கிறார்?
ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளார் என்பதை குறிப்பிட்டு ஒரு முக்கிய தீர்மானத்தை நான் சமர்ப்பித்துள்ளேன்.அவரது எம்.பி. பதவியை ரத்து செய்ய வேண்டும் என்றும், வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்றும் நான் கோரியுள்ளேன்.” இவ்வாறு நிஷிகாந்த் துபே தெரிவித்துள்ளார்.