பெங்களூரு:
பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் நேற்று தனது அலுவலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் பெங்களூருவில் போக்குவரத்து பிரச்சினையை சரிசெய்வது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த கூட்டத்தில் துஷார் கிரிநாத் பேசுகையில், பெங்களூருவில் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து பிரச்சினையை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இணைப்பு சாலைகளில் தேவையின்றி வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இணைப்பு சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வாகனம் நிறுத்த தடை செய்யப்பட்ட பகுதி என்று பலகைகள் வைக்கப்பட வேண்டும். வெளிவட்ட சாலைகள் மற்றும் முக்கிய சாலைகளில் உள்ள நடைபாதைகளில் வியாபாரிகள் வியாபாரம் செய்வதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி, ஸ்மார்ட் சிட்டி திட்ட இயக்குனர் ராஜேந்திர சோழன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.