பாட்னா,
பீகாரில் ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலுவுக்கு சொந்தமுடைய 3 ஏக்கர் நிலம் அமலாக்க துறையால் நேற்று முடக்கப்பட்டது. இதனை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என லாலுவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் கூறினார்.
ஓட்டல்களுக்கு பதிலாக நிலம் என்ற அடிப்படையில் நடந்த ஊழலில் எப்.ஐ.ஆர். பதிவாகி 5 மாதங்கள் கடந்த நிலையில் குற்ற பத்திரிக்கை ஏன் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மோடி, குற்ற பத்திரிகைக்கு காத்திருப்பதற்கு பதிலாக, மிக குறைந்த வயதில் ரூ.750 கோடி திட்ட மதிப்பிலான பெரிய வணிக வளாகம் கட்டப்பட உள்ள 3 ஏக்கர் நிலத்திற்கு எப்படி சொந்தக்காரர் ஆனார் என தேஜஸ்வி விளக்க வேண்டும்.
உண்மையில், அவர்களுக்கு எதிராக வலுவான சான்றை அமலாக்க துறை வைத்திருக்கிறது. அவர்கள் குற்ற பத்திரிகை மட்டுமின்றி சிறைக்கும் செல்ல தயாராக வேண்டும். தண்டனையும் வழங்கப்படும் என கூறியுள்ளார்.
சமீபத்தில் தேஜஸ்வி மிரட்டினார் என கூறி மோடி தனது மகனின் திருமணம் நடைபெற இருந்த இடத்தினை வேறு இடத்திற்கு மாற்றினார். ஆனால் அந்த நிகழ்ச்சியில் லாலு பிரசாத் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.