தேசிய செய்திகள்

கொரோனா மரண சர்ச்சை; அடிப்படையற்ற, தவறாக வழிநடத்தும் தகவல்: அரசு அறிவிப்பு

கொரோனா மரணம் குறைத்து காட்டப்பட்டு உள்ளது என்பது அடிப்படையற்ற மற்றும் தவறாக வழிநடத்தும் தகவல் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

புதுடெல்லி :

நாட்டில் கொரோனா முதல் அலையை விட, கடந்த ஆண்டு ஏற்பட்ட 2ம் அலையின்போது அதிகம் பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே தற்போது 3ம் அலையும் ஏற்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில், நாட்டில் இதுவரை 4.85 லட்சத்திற்கும் கூடுதலானோர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

எனினும் கணக்கில் காட்டப்பட்ட எண்ணிக்கையை விட அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், அதை மத்திய அரசு மறைத்துவிட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதுபற்றி மத்திய சுகாதார துறை வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையை மத்திய அரசு குறைத்து காட்டியதாக வெளியாகும் ஊடக செய்திகளில் உண்மை இல்லை.

அது தவறான தகவல். நம் நாட்டில் பிறப்பு மற்றும் இறப்பு சார்ந்த விபரங்களை வெளியிடும் நடைமுறைகள், வெளிப்படை தன்மையுடன் நடந்து வருகின்றன. உண்மையான தகவல்கள் மட்டுமே மத்திய அரசால் வெளியிடப்பட்டு வருகின்றன.

அனைத்து நடைமுறைகளும், இந்திய தலைமை பதிவாளரின் மேற்பார்வையில் நடைபெறுகின்றன. எனவே அதில் மறைப்பதற்கு எதுவும் இல்லை. இதுபோன்ற ஊடக தகவல்கள் உண்மையை அடிப்படையாக கொண்டவை அல்ல. பிறப்பு மற்றும் இறப்பு பற்றிய தகவல்கள் கிராம பஞ்சாயத்து அளவிலும், மாவட்ட மற்றும் மாநில அளவிலும் சீராக நடைபெற்று வருகிறது என கூறப்பட்டுள்ளது.