புதுடெல்லி,
தலைநகர் டெல்லி கொரோனாவின் பிடியில் சிக்கி தத்தளித்துக்கொண்டிருக்கிறது. அங்குள்ள பல ஆஸ்பத்திரிகளில் தீவிரமான பாதிப்பில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் நெருக்கடி தொடர்கிறது.
இந்த நிலையில் டெல்லி ராஜேந்திரா நகரில் அமைந்துள்ள சர் கங்காராம் தனியார் ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் நெருக்கடியால், மிக மோசமான நிலையில் இருந்து வந்த 25 கொரோனா நோயாளிகள் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்திருக்கிறார்கள். இவர்களின் இறப்புக்கு காரணம் குறைந்த அழுத்த ஆக்சிஜன்தான் என ஒரு தகவல் கூறுகிறது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த செய்தி ஏற்படுத்தியிருந்த நிலையில், மேலும் ஒரு அதிர்ச்சிகர செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது, டெல்லியில் உள்ள ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று இரவு 20 பேர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆக்சிஜன் சப்ளை இன்னும் அரை மணி நேரத்திற்கு மட்டுமே நீடிக்கும் என்பதால் மேலும் 200- பேரின் உயிருக்க்கு ஆபத்து இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது.