புதுடெல்லி,
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா மற்றும் மேகாலயாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை எதிர்த்து மக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம், குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழக மாணவ மாணவியர்களும் மற்றும் உத்தர பிரதேசத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதேபோன்று டெல்லி சீலாம்பூரிலும் இன்று போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதில் அரசு போக்குவரத்து கழகத்தின் 2 பேருந்துகள் மற்றும், ஒரு அதிவிரைவு அதிரடி படை பேருந்து மற்றும் சில பைக்குகள் சேதமடைந்து உள்ளன.
இதுவரை 21 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்களில் 12 பேர் டெல்லி காவல் துறை அதிகாரிகள். 3 பேர் அதிவிரைவு அதிரடி படையை சேர்ந்தவர்கள் ஆவர். வன்முறையில் ஈடுபட்டதற்காக 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 2 போலீஸ் பூத்கள் சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில், கடந்த 15ந்தேதி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆசிப் கான் மீது குற்றவாளி என எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.