கொரோனா வைரஸ் தொற்றை வருவதற்கு முன்பே தடுப்பதற்கு இன்னும் தடுப்பூசி, மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.
இந்த நிலையில், ஆர்சனிகம் ஆல்பம்-30 என்ற ஓமியோபதி மருந்து நோய் எதிர்ப்புச்சக்தியை பெருக்கி, கொரோனாவை வரவிடாமல் தடுக்கிறது என்ற கருத்து பரவலாக நிலவுகிறது.
இதை குஜராத் அரசு, தன் மாநிலத்தில் பாதிப்பேருக்கு வினியோகித்து இருக்கிறது.
இதை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு உத்திகள் பற்றி உலக சுகாதார நிறுவனத்திடம் கடந்த 20-ந் தேதி விளக்கியபோது, குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது. அங்கு மொத்த மக்கள் தொகை 6.60 கோடி. இவர்களில் 3.48 கோடி பேருக்கு இந்த மருந்து வழங்கப்பட்டுள்ளதாம்.
இந்த ஆர்சனிகம் ஆல்பம்-30 மருந்து, கொரோனாவுக்கு எதிராக வேலை செய்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என விஞ்ஞானிகள் மட்டுமின்றி ஓமியோபதி மருத்துவர்களே கூறிய நிலையிலும், குஜராத் அரசு இந்த மருந்தில் நம்பிக்கை வைத்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் நோய்த்தடுப்பு மருந்துகளாக ஆயுஷ் நிவாரணங்களை பெற்றவர்களில் 99.69 சதவீதம் பேர், கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளனர் என்று குஜராத் அரசு சொல்கிறது.
இதுபற்றி பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து குஜராத் மாநில சுகாதார அமைச்சகம் பகிர்ந்து கொண்டபோது, ஆயுஷ் மருந்துகள் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே ஆயுஷ் சிகிச்சை நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிகிச்சை செயல்திறனை மதிப்பிடுவதற்கு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் கூறுகிறது.
கொரோனாவுக்கு எதிராக ஆர்சனிகம் ஆல்பம்-30 ஓமியோபதி மருந்து தடுப்பு மருந்தாக செயல்படுகிறதா என்பது பற்றிய மருத்துவ பரிசோதனை, இதுவரை எந்த முடிவையும் தரவில்லை என்று ஒரு அதிகாரி கூறினார்.
மாநில அரசு ஆயுஷ் துறை இயக்குனர் பாவ்னா படேல் கூறும்போது,ஆர்சனிகம் ஆல்பம்-30 மருந்து, நோய் எதிர்ப்புச்சக்தியை பெருக்குகிறது, இது தொடர்பான எங்கள் ஆராய்ச்சி இன்னும் முடியவில்லை. இதை தனியார் துறையின் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்துள்ளோம் என்றும் அவர் கூறினார்.