பிரதமர் மோடி நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை மீரட்டில் மேற்கொண்டார். அப்போது பேசுகையில், முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விமர்சனம் செய்தார். காங்கிரஸை நாட்டின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் அகற்றினாலே வறுமையை அகற்றிவிடலாம் என குறிப்பிட்டார். இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் மீண்டும் மோடி அரசுதான் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதுவரையில் வெற்று கோஷமிடும் ஏராளமான அரசுகளை பார்த்திருக்கிறார்கள்.
இப்போதுதான் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனும் தீர்மானம் கொண்ட அரசை பார்க்கிறார்கள். உங்களுடைய இந்த காவலாளி அரசு, நிலமாக இருந்தாலும் சரி, ஆகாயமாக இருந்தாலும் சரி, விண்வெளியாக இருந்தாலும் சரி துணிச்சலாக காவல்காத்து துல்லிய தாக்குதல் நடத்தும். பாலகோட்டில் பயங்கரவாத முகாம்களை அழித்தோம். விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் வகையில் மிஷன் சக்தி திட்டத்தை வெற்றிகரமாக முடித்திருக்கிறோம். ஆனால் இந்த அரசு செய்கின்ற சாதனைகள் மீது எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்புகிறார்கள். எதிர்க்கட்சியினரை பாகிஸ்தான் மீடியாக்கள் கொண்டாடுகிறது. அவர்கள் பாகிஸ்தானின் ஹீரோவாகி விட்டனர். எனவே உங்களுக்கு பாகிஸ்தானின் ஹீரோ வேண்டுமா? அல்லது இந்தியாவின் உண்மையான ஹீரோ வேண்டுமா? என்பதை முடிவு செய்யுங்கள் என்று பிரதமர் மோடி பேசினார்.