ஜெய்பூர்,
ராஜஸ்தானில் வரும் 29-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறு உள்ளது. இடைத்தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் புகைப்படமும் இடம்பெற்று இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரே பெயர்களை கொண்ட இரண்டு, மூன்று வேட்பாளர்கள் போட்டியிடும் போது குழப்பம் நேரிடுவதை தவிர்ப்பதற்காக புகைப்படங்கள் பயன்படுத்தப்படுகிறது என தேர்தல் அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ராஜஸ்தான் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அஸ்வினி பகத் செய்தியாளர்களிடம் பேசுகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம் ஆகியவற்றுடன் அவரது புகைப்படத்தையும் இணைக்க உள்ளோம், என்றார்.
ராஜஸ்தானில் அஜ்மீர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சன்வர்லால் ஜட், அல்வர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சந்த் நாத், மண்டல்கிரக் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கீர்த்தி குமாரி ஆகியோரது மரணத்தை தொடர்ந்து மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 29-ம் தேதி இடைத்தேர்தல் மூன்று தொகுதிக்கும் நடைபெறுகிறது. இடைத்தேர்தலையொட்டி பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மூன்று தொகுதிகளிலும் இடைத்தேர்தலை அமைதியான முறையில் நடத்த திட்டமிட்டுள்ளேன். அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் அஸிவினி பகத் கூறிஉள்ளார்.
டோல்பூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் இதேபோன்று வேட்பாளரின் புகைப்படத்துடன் கூடிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது. பாராளுமன்ற தொகுதி தேர்தலில் இதுபோன்று மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்துவது இதுவே முதன்முறையாகும்.