தேசிய செய்திகள்

எதிர்பார்த்தை விட இந்தாண்டு வளர்ச்சி குறைவாக இருக்கும்: அரசு ஆய்வறிக்கை

நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்தை விட குறைவாகவே இருக்கும் என்று அரசு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

புதுடெல்லி

அரசின் இரண்டாவது பொருளாதார அறிக்கையில் 2017-18 ஆம் ஆண்டிற்காக பொருளாதார வளர்ச்சி 6.75-7.50 சதவீதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்று கூறியுள்ளது. கடந்த ஜனவரியில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.75-7.5 சதவீதத்தில் வளர்ச்சியிருக்கும் என்று கணிக்கப்பட்டிருந்தது.

தற்போதைய அறிக்கை பொருளாதாரம் முழுமையாக துடிப்புள்ளதாக மாறுவதற்கு இன்னும் சிறிது காலம் ஆகும் என்று கூறியுள்ளது. பொருளாதாரத்தில் விவசாய வருமானத்தின் மீதான அழுத்தம், உணவுப் பொருட்களின் விலை வீழ்ச்சி, விவசாய கடன் தள்ளுபடி மற்றும் அரசின் நிதிநிலையில் இறுக்கம் மட்டுமின்றி மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இலாப வீழ்ச்சி போன்றவை இறுக்கத்தை கொடுத்துள்ளது என்கிறது அறிக்கை.

அதே சமயம் ஜி எஸ் டி நடைமுறை, பணமதிப்பு நீக்கத்தின் பாதிப்புகள், ஏர்-இந்தியாவை தனியார்மயம் செய்வது, எரிசக்தி மானியம் குறைப்பு போன்றவை பொருளாதாரத்தை சாதகமாக மாற்ற உதவும் என்றது அவ்வறிக்கை. மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் பரிந்துரையான 4 சதவீதத்திற்குள்ளேயே விலைவாசி இருப்பது மற்றொரு முக்கிய அம்சம் என ஆவணம் கூறுகிறது.

அரசு வழக்கமான பொருளாதார வழிமுறைகளைக் கொண்டே இப்போதைய சிக்கலுக்கு தீர்வுகாண வேண்டியிருக்கிறது என்றும் அந்த ஆவணம் கூறுகிறது.

SCROLL FOR NEXT