புதுடெல்லி,
ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) லக்னோவில் நடக்கிறது. அதில், சுமார் 50 யோசனைகள் பரிசீலனைக்கு முன்வைக்கப்படுகின்றன. அவற்றில், உணவகங்களில் இருந்து வீடுகளுக்கு உணவு வினியோகம் செய்யும் சொமேட்டோ, ஸ்விக்கி போன்றவற்றை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதும் அடங்கும்.
அதன்படி, இந்த செயலிகள், உணவகங்களாக கருதப்படும். அவை வினியோகிக்கும் உணவுவகைகள் மீது 5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும். இந்த வரியை வசூலித்து, அவை மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். நாளைய கூட்டத்தில் இந்த யோசனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், மேற்கண்ட நிறுவனங்கள் வரி வசூலிப்புக்கு ஏற்ப தங்களது மென்பொருளில் மாற்றம் செய்ய சிறிது கால அவகாசம் அளித்து அமல்படுத்தப்படும் என்று தெரிகிறது. இத்தகைய நிறுவனங்களின் செயல்பாடுகளால் மத்திய அரசுக்கு கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி வரி இழப்பு ஏற்பட்டதால், இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.