புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் தற்போது மழைக்காலம். இடை இடையே வெயில் அடித்தாலும் மழை பெய்யும்போது மிக அதிக கனமழையாக பெய்து வருகிறது. இதன்படி நேற்று முன்தினம் மற்றும் நேற்று காலை வேளைகளில் மீண்டும் கனமழை பெய்தது.
இடி- மின்னலுடன் நகரம் முழுவதும் பரவலாக பெய்த இந்த மழையால் ரோடுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல்வேறு இடங்களிலும் குளம்போல தண்ணீர் தேங்கியது. இதனால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் கனமழை பெய்து வருகிறது. நகரம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தொடர்ந்து 3-வது நாளாக மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.
இதற்கிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லியின் பல பகுதிகளில் மிதமான மற்றும் பலத்த இடியுடன் கூடிய மழை நீடிக்கும் என்றும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.