தேசிய செய்திகள்

காஷ்மீர் பனிப்பொழிவு இயற்கை பேரிடராக அறிவிப்பு!

காஷ்மீரில் தற்போது பெய்த பனிப்பொழிவை தேசிய பேரிடராக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை மற்றும் பனிப்பொழிவால் மிகப்பெரும் சேதத்தை சந்தித்துள்ளது.

பனிப்பொழிவால் ஆப்பிள் பழங்கள் தானாக மரத்திலிருந்து விழுந்து வீணானதுடன் பல கிளைகள் உடைந்து சேதமானது. இதனால் ஆப்பிள் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பனிப்பொழிவால் பெரும் சேதத்தை சந்தித்த விவசாயிகள் உரிய நிவாரணம் வழங்கக்கோரி அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், ஸ்ரீநகரில் இந்த ஆண்டுக்கான ஆப்பிள் திருவிழாவை தொடங்கி வைத்து பேசிய ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, பனிப்பொழிவால் ஆப்பிள் தோட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை இயற்கை பேரிடராக அரசு அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று கூறினார்.

மேலும், எந்த விவசாய நிலமும் வெளியாட்களுக்கு வழங்கப்படவில்லை என்றும், ஜம்மு காஷ்மீர் நிலத்தை பாதுகாப்பது அரசின் பொறுப்பு என்றும் கவர்னர் மனோஜ் சின்ஹா கூறினார்.