கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் இந்திய பயணங்களுக்கும், இந்தியர்களுக்கும் பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன. மேலும் வெளிநாடுகளில் இருந்து வேலை மற்றும் கல்விக்காக வருவோருக்கு தடுப்பூசி கட்டாயம் என்பதையும் பல்வேறு நாடுகள் சட்டமாக்கியுள்ளன. இந்த நிலையில் கேரள அரசாங்கம், தடுப்பூசிக்கான முன்னுரிமை பட்டியலில் வெளிநாட்டு வேலை மற்றும் படிப்புக்கு செல்வோரையும் சேர்த்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இவர்களையும் சேர்த்து, முன்கள பணியாளர்கள், குறிப்பிட்ட அரசு துறை ஊழியர்கள் உள்ளிட்ட 32 வகையினர் தடுப்பூசி முன்னுரிமை
பட்டியலில் உள்ளனர்.
இந்த உத்தரவை அடுத்து, வேலை- கல்வி பயணமாக வெளிநாடு செல்வோர், 18-44 வயதுடையோருக்கான தடுப்பூசி திட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் பெயரை பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை மந்திரி கூறி உள்ளார். 18-44 வயதுடையோருக்கான தடுப்பூசி போடும்பணி கடந்த 17-ந்தேதி முதல் கேரளாவில் ஆரம்பமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.