பானஜி,
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் உடல்நிலை பிரச்சினையால் அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கணைய புற்றுநோய்க்கு மனோகர் பாரிக்கர் சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகிறது.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மனோகர் பாரிக்கர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். அமெரிக்காவுக்கு செல்லும் முன் கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி டெல்லி லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மனோகர் பாரிக்கரின் உடல் நிலை நன்கு தேறி வருவதாக அவரது தனிப்பட்ட செயலர் மார்ச் 21 ஆம் தேதி தெரிவித்து இருந்தார்.
இந்த சூழலில்,கோவாவைச்சேர்ந்த கென்னத் சில்வெய்ரா என்ற இளைஞர், தனது முகநூல் பக்கத்தில், மனோகர் பாரிக்கர் இறந்துவிட்டதாக தற்போதுதான் செய்தி கிடைத்தது என பதிவு வெளியிட்டு இருந்தார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வேகமாக பகிரவும் பட்டது.
இதனால், கோவா மக்கள் மத்தியில் இச்செய்தி பரபரப்பு ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்திய தண்டனைச்சட்டம் பிரிவு 505-ன் கீழ் போலி செய்திகளை பரப்பி அச்சத்தை ஏற்படுத்தியதாக இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.