புதுடெல்லி,
பிரதமர் மோடியை கடுமையான வார்த்தையால் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பேசியது பெரும் சர்ச்சையாகி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக குஜராத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, குஜராத் மக்கள் காங்கிரசுக்கு வாக்கால் பதிலடி கொடுப்பார்கள் என்றார். இவ்விவகாரத்தை உடனடியாக கையில் எடுத்த ராகுல் காந்தி, மணிசங்கர் அய்யர் உடனடியாக பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனையடுத்து மணிசங்கர் அய்யர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில் பிரதமர் மோடியை தரம்தாழ்த்தி விமர்சனம் செய்த மணிசங்கர் அய்யர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
பிரதமர் மோடி குறித்தான விமர்சனம் தொடர்பாக மணிசங்கர் அய்யர் விளக்கம் அளிக்க காங்கிரஸ் நோட்டீஸ் விடுத்து உள்ளது.