ஸ்ரீநகர்,
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இரண்டு நாள் பயணமாக ஜனாதிபதி ஆட்சி நடந்து வரும் காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு சென்றார். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகள், சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து ஆய்வு செய்துவிட்டு டெல்லி திரும்பினார். இந்நிலையில், காஷ்மீருக்கு 10 ஆயிரம் துணை ராணுவ வீரர்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
இது குறித்து உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் துணை ராணுவம் அனுப்பி வைக்கப்படுவதாக கூறியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து விமானம் மூலம் துணை ராணுவ வீரர்கள் காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 100 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மெகபூபா விமர்சனம்
இந்த நிலையில், காஷ்மீரில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்படுவதற்கு மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முப்தி மத்திய அரசை சாடியுள்ளார். மெகபூபா முப்தி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- பள்ளத்தாக்கு பகுதிகளில் கூடுதலாக 10 ஆயிரம் வீரர்களை ரோந்து பணிகளில் மத்திய அரசு ஈடுபடுத்துவது மக்கள் மத்தியில் அச்சநிலையை உருவாக்கும். காஷ்மீர் பாதுகாப்பில் பாதுகாப்பு படையினருக்கு பஞ்சம் இல்லை. ஜம்மு காஷ்மீரில் அரசியல் பிரச்சினை மட்டுமே உள்ளது. ராணுவம் மூலமாக இதை தீர்க்க முடியாது. இந்திய அரசு மறுபரீசிலனை செய்து முடிவை முற்றிலும் மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.